இன்று மாலை முதல் குவிக்கப்படும் பொலிஸார் – பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை!
கொழும்பு நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக இன்றும் நாளையும் பாரியளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய மேல் மாகாணத்திற்கு வெளியில் இருந்து சுமார் மூவாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவொன்றை விசேட கடமை அடிப்படையில் கொழும்புக்கு வரவழைப்பதற்கு பொலிஸ் தலைமையகம் ஏற்கனவே ஏற்பாடுகளை செய்துள்ளது.
மேலும், மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கொழும்பில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விசேட கடமை அடிப்படையில் வடமே, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து அழைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் பதவிகளில் உள்ள 600 உத்தியோகத்தர்களும் பொலிஸ் பரிசோதகர் தரத்திலான 24 அதிகாரிகளும் கம்பஹா தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.