இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்குரிய நடைமுறைகள் பாராளுமன்றத்தின் ஊடாக அமுல்

Nila
2 years ago
இலங்கையில்  புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்குரிய நடைமுறைகள் பாராளுமன்றத்தின் ஊடாக அமுல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (13) பதவி விலகியதன் பின்னர், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தேவையான நடைமுறைகளை பாராளுமன்றத்தின் ஊடாக அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் திகதியை நிர்ணயித்துள்ளனர்.

இதன்படி ஜனாதிபதி ஒருவர் பதவி விலகும் போது மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும்.

எனவே எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பதவி விலகியதாக பாராளுமன்றம் கூட்டப்பட்டு வேட்புமனுக்கள் கோரப்படும்.

புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (11) நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள்கூட்டத்திலேயே அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.