கோட்டாவின் இராஜினாமா கடிதத்துக்காக சபாநாயகர் இன்றும் காத்திருப்பு!

Prabha Praneetha
2 years ago
கோட்டாவின் இராஜினாமா கடிதத்துக்காக சபாநாயகர் இன்றும் காத்திருப்பு!

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜுலை 13ஆம் திகதி பதவி விலகுவார், 13 ஆம் திகதிக்குள் அவரின் இராஜினாமாக் கடிதம் கிடைக்கப்பெறும் என சபாநாயகர் இரு தடவைகள் நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.

எனினும், இன்று ஜுலை 14. இதுவரை பதவி விலகல் கடிதம் கிடைக்கப்பெறவில்லை என தெரியவருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல முடியவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று இரவு மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்தனர்.

சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில், பாதுகாப்பு நிலைமை காரணமாக அதனை குறித்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ஜனாதிபதி தனி விமானம் மூலம் மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.