ரணில் விக்ரமசிங்கவிடம் பதவி விலகுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

Mayoorikka
2 years ago
ரணில் விக்ரமசிங்கவிடம் பதவி விலகுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் (FUTA) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உடனடியாக பதவி விலக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதில் முதலாவதாக கோரப்பட்டுள்ளது.


ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறுகின்ற போது, ஜனாதிபதி பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டாம் எனவும் ரணில் விக்ரமசிங்கவிடம்  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரத்தை அடக்குமுறைக்கும் வன்முறைகளுக்கும் பயன்படுத்த வேண்டாம் என மூன்றாவது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆணையற்ற அரசாங்கத்திற்கு நற்பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக பதவி விலகுவது குறித்து சிந்திக்குமாறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் அறிக்கை மூலம் பதில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.


நாட்டிலிருந்து தப்பிச்சென்ற இழிவான ஜனாதிபதியால், ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.