உயர் பதவிகளுக்கு உச்சபட்ச போட்டி

Mayoorikka
2 years ago
உயர் பதவிகளுக்கு உச்சபட்ச போட்டி

புதிய ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்றத்தில் நான்கு முனை யுத்தம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு இடையிலேயே இந்த யுத்தம் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் நான்கு பேரும் ஜனாதிபதி பதவியை வெல்லும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றிகொள்ளும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில சக்திவாய்ந்த உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க முயன்று வருகின்றனர்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அக்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்ட இரண்டு அமைச்சர்கள் முயன்று வருகின்றனர்.
 
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமிக்க கட்சியின் முக்கியஸ்தர்கள் தீவிரம் காட்டி வருவதுடன், அனுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான குழுவினரும் அவருக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது. 

டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக தெரிவுசெய்வதற்காக எம்.பிக்களை வெற்றிகொள்ளும் நடவடிக்கையை மொட்டுக் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் குழுவொன்று முன்னெடுத்து வருகின்றது.

மேலும், ஒன்பது பங்காளிக் கட்சிகளின் குழுவும் டலஸ் அழப்பெருமைவுக்கு ஆதரவளிக்கத் தயாராகி வருவதாகத் தெரியவருகிறது.

ரணில், டலஸ், சஜித் ஆகியோருக்கு ஆதரவளிக்கும் வகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி குழுவும் மூன்று பிரிவுகளாக பிளவுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கான தகைமைகளை பல பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்து வருவதாக அறியமுடிகிறது.

சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன, அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் பிரதமர் பதவியை கோருவதாகவும் தெரிய வந்துள்ளது.