கஷோகி கொலை சவுதி இளவரசரிடம் கேள்வி எழுப்பிய பைடன்

Kanimoli
2 years ago
கஷோகி கொலை சவுதி இளவரசரிடம் கேள்வி எழுப்பிய பைடன்

ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடனான சந்திப்பின் போது, தான் எழுப்பியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவுடனான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கு விஜயம் சென்றுள்ளார்.

இதன்போது ஜெட்டாவில் உள்ள அரச அரண்மனையில் மூன்று மணிநேரம் இடம்பெற்ற இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஜோ பைடன், இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

2018ஆம் ஆண்டு ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை செய்யப்பட்டமை தனக்கும் அமெரிக்காவிற்கும் மிகவும் முக்கியமானது என்பதை தெளிவுபடுத்தியதாக கூறியுள்ளார்.

ஆனால், இந்த கொலைக்கு தான் தனிப்பட்ட முறையில் பொறுப்பல்ல என்று சவுதி இளவரசர் பதிலளித்ததாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் 2018ஆம் ஆண்டு ணக்டோபரில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சவுதி ஊடகவியலாளர் கஷோகி கொல்லப்பட்டார்.

இந்த கொலைக்கு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை இளவரசர் மறுத்துள்ளார்.

சவுதி மன்னர், சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’பத்திரிகைக்கு எழுதி வந்தவரே ஊடகவியலாளர்  ஜமால் கஷோகி என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும், இந்த சந்திப்பின் போது, அமெரிக்க அமைதி காக்கும் படையினர் இந்த ஆண்டு இறுதிக்குள் செங்கடல் தீவான தீரானை விட்டு வெளியேறுவார்கள் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.