காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அறிக்கை!

Nila
2 years ago
காலிமுகத்திடல் தாக்குதல்  தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அறிக்கை!

கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள போராட்ட முகாமை அகற்றுவதற்கு, பாதுகாப்புப் படையினர் தேவையற்ற பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் பீதியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் ஜெரமி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன்போது போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது தடியடி நடத்தப்பட்ட செய்திகளையும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் கண்டித்துள்ளது.

பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை தாக்கியபோது, குறைந்தபட்சம் 48 பேர் காயமடைந்தனர்,

தாக்குதலின் போது போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை

அத்துடன் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் குறைந்தது நான்கு ஊடகவியலாளர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டனர்.

கூடாரங்கள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சமையலறை பொருட்கள் உட்பட போராட்டக்காரர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அழிக்கப்பட்டன அல்லது பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டு சட்டத்தரணிகள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆர்ப்பாட்டங்களைக் கண்காணித்து அறிக்கையிடுவதற்கு உரிமையுடையவர்கள், எனவே இந்தச் செயற்பாடுகளை எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது என்று மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் வலியுறுத்தினார்.

எனவே, அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக பலாத்காரம் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது எனவும், அவ்வாறான பலத்தை பயன்படுத்துவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கோரியுள்ளது.

பொருந்தக்கூடிய சர்வதேச சட்டத்தின் கீழ், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே கூட்டங்கள் கலைக்கப்படவேண்டும்.

காலிமுகத்திடல் போராட்டக்களம் மீதான தாக்குதலானது, நாட்டின் பிற இடங்கள் உட்பட அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு அச்சம் மிகுந்த செய்தியை அனுப்பியுள்ளது.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி மற்றும் அது அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களது குடும்பங்களின் நல்வாழ்வில் ஏற்படுத்தும் விளைவு குறித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கும் குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு.

எனவே இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை பலவந்தமாக தீர்க்க முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பரந்த ஆலோசனைகள் மற்றும் உரையாடல்களின் மூலமே, சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இலங்கையர்கள் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.