இன்றைய வேத வசனம் 25.07.2022: நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 25.07.2022: நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது

எனக்குத் தெரிந்த ஒரு இளம் பெண்ணுக்குத் திருமணமாகியது. அவளுடைய கணவன் வடநாட்டில் அருட்பணியாளராக ஊழியம் செய்து வந்தார்.

எனவே, இருவருமாக விரைவிலேயே பணிதளத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது.
அந்த இளம் பெண் பட்டணத்தில் ஒரு பெரிய ஞாயிறு பள்ளி வகுப்பை நடத்தி வந்தாள். அது பல குழந்தைகளுக்கு ஆசீர்வாதமாக இருந்தது.

தான் சென்ற பிறகு யார் அந்த வகுப்பை நடத்துவார்கள் என்று அவள் கவலைப்பட்டாள். அவளுக்கு ஒரு இளைய சகோதரன் இருந்தான். ஆனால் அவன் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.

தனது சகோதரன் மனந்திரும்பி, தான் விட்டுச்செல்லும் வகுப்பை நடத்த வேண்டுமென்று அவள் ஊக்கமாக ஜெபித்து வந்தாள். நாட்கள் நெருங்க நெருங்க அவள் இன்னும் ஊக்கமாக ஜெபித்தாள்.

கடைசியாக அவள் புறப்பட வேண்டிய நாள் வந்தது. வீட்டில் எல்லோரும் கூடி வந்தார்கள். அவளை மறுபடியும் பார்க்க முடியுமோ என்ற கவலை எல்லோருக்கும் இருந்தது. அவளுடைய தகப்பன் கண்ணீரோடு அவளுக்கு விடை கொடுத்தார்.

அவளுடைய சகோதரன் மாடிக்கு ஓடிவிட்டான். அவள் தன்னுடைய கணவனோடு வீட்டுக்கு வெளியே வந்தாள்.

அப்போது அவளுடைய சகோதரன் வேகமாக ஓடிவந்து அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டான்.
"அன்புள்ள அக்கா, உன்னுடைய இரட்சகரை நானும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய வகுப்பை நான் நடத்துகிறேன்" என்று வாக்கு கொடுத்தான்.

அவள் மிகவும் சந்தோஷத்தோடு தன் ஜெபத்திற்கு பதிலளித்த தேவனை துதித்து மகிழ்ந்தாள்.
ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. (யாக்கோபு 5:16)