ஜோர்ஜியாவில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் 8 பேர் பலி
ஜார்ஜியா நாட்டின் வடக்கு பகுதியில் குடெவ்ரி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பாராகிளைடிங் என்ற பயிற்சிக்காக சிறிய விமானத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அந்த விமானத்தில் அவரும், விமானி ஒருவரும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அங்குள்ள ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த ஜார்ஜியா எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து விபத்துக்குள்ளான அதே இடத்தில் ஹெலிகாப்டரும் விழுந்து நொறுங்கியது.
இதனை தொடர்ந்து, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றொரு ஹெலிகாப்டரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானி உள்பட 4 பாதுகாப்பு படை வீரர்கள், மீட்பு குழுவை சேர்ந்த 2 பேர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் 2 பேர் என 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதே போல் விமானம் விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் விமானி மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
அவரை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.