வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் அமைப்பதற்கான திட்டமுன்மொழிவு - துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன்

Kanimoli
2 years ago
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் அமைப்பதற்கான திட்டமுன்மொழிவு - துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன்

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் ஒன்றை அமைப்பதற்கான திட்டமுன்மொழிவை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கிகாரத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா வளாகமாக இருந்த எமது நிறுவனம் தனி பல்கலைக்கழகமாக தரமுயர்ததப்பட்டு இன்றுடன் ஒருவருடம் கடந்துள்ளது. இந்த காலப்பகுதியில் பல்வேறுபட்ட சவால்களிற்கு மத்தியில் பல விடயங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.

அந்த வகையில் நல்லிணக்க மையம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். அத்துடன் சர்வதேசத்தினை சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து கற்கைநெறிகளை பயில்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம்.

அத்துடன் விசேடதேவைக்குட்டவர்களிற்கான அலகு ஒன்றை ஆரம்பித்து அவ்வாறாக சமூகத்தில் உள்ளவர்களின் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான அனுசரணை வழங்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்திருக்கிறோம்.

அத்துடன் எமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் அறியும்பொருட்டு கலாசார நூதனசாலை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவபீடம் ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை எமது மூதவையும் பேரவையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

தற்போது அதற்கான திட்டமுன்மொழிவினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பவுள்ளோம். இதன் மூலம் வவுனியாமாவட்ட பொது வைத்தியசாலையையும் ஒரு போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவால் எமது திட்ட அறிக்கை அங்கிகரிக்கப்பட்டதுடன் அதன் நிர்மானபணிகள் ஆரம்பிக்கப்படும். குறிப்பாக எதிர்வரும் சில வருடங்களுக்குள் மருத்துவ பீடத்தினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன் சூழலியல் பீடம் ஒன்றினை உருவாக்குவதற்கும் எமது மூதவையும் பேரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன் வங்கியியல் காப்புறுதி தொடர்பான புதிய கற்கைநெறி ஒன்றை ஆரம்பிப்பதற்கு மானியங்கள் ஆணைக்குழு எமக்கு அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த கற்கைநெறிக்கு க.பொ.த உயர்தரத்தில் கடந்த வருடத்தில் சிறப்புத்தேர்ச்சிபெற்ற மாணவர்களை அனுமதிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

மானுடவியல் சமூகவியல் என்ற பீடத்தை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவையும் சமர்ப்பித்துள்ளோம். அதற்கான அனுமதி கிடைத்ததும் அது விரைவில் ஆரம்பிக்கப்படும்.

அத்துடன் நல்லிணக்க மையம் ஒன்றின் ஊடாக பெண்கள் அரசியலில் ஈடுபடும் வகையில், அதனை வலுவூட்டுவதற்கான சான்றிதழ் கற்கைநெறி ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

இந்த மையத்தின் ஊடாக ஊடகத்துறையில் சான்றிதழ் கற்கைநெறியினை வழங்குவதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. அவையும் உடனடியாக ஆரம்பிக்கப்படும். அத்துடன் கடந்த ஒருவருடத்தில் சர்வதேச மாநாடு ஒன்றை எமது பல்கலைகழகம் நடத்தியுள்ளது.

அத்துடன் எமது பீடங்கள் பல்வேறுபட்ட தொழில்சார் கற்கை நிறுவனங்களுடனும், சமூக அடிப்படையிலான நிறுவனங்களுடனும் உடன்படிக்கைகளை மேற்கொண்டு அவர்களுக்கும் பல்கலைகழகத்திற்கும் இடையிலான ஒரு தொடர்பினையும் ஏற்படுத்தியுள்ளோம்.

அத்துடன் பொருளாதார நெருக்கடி நிலமையால் அரசாங்கம் சாதாரண செலவீனங்களை வழங்குவதற்கே உடன்பட்டுள்ளது.

நிர்மாண துறைகளிற்கான நிதியினை தராத சூழ்நிலையில் அதனை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு நிதி உதவிகளூடாகவும், அரச தனியார் பங்குடமையின் ஊடாகவும் அதனை செய்வதற்கான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.

அத்துடன் மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்திசெய்வதற்காக மக்கள் நலன் தொடர்பான அலகு ஒன்றையும் உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

அத்துடன் உயர் கற்கைநெறிகளையும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அத்துடன் பொருளாதார சிக்கல்கள் ஏனைய சவால்களினால் நாங்கள் திட்டமிட்டவற்றில் குறிப்பிட்ட சிலவற்றை அடையக்கூடியதாக உள்ளது.

ஏனைய சவால்களையும் முறியடித்து ஏனைய திட்டமிடல்களையும் சிறப்பாக மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்