22வது திருத்த வரைவு, அமைச்சரவையினால் அங்கீகரிப்பு

#SriLanka
Kobi
2 years ago
22வது திருத்த வரைவு, அமைச்சரவையினால் அங்கீகரிப்பு

ரசியலமைப்பின் 22வது திருத்த வரைவு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் அரசியலமைப்பு திருத்த வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

21ஆவது திருத்தச் சட்டத்தின் மற்றுமொரு வரைவு ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட இந்த திருத்தம் 22ஆவது திருத்தமாகவே இருக்கும்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கான ஆரம்ப வரைவுக்கு, ஏற்கனவே 2022.06.20 அன்று அமைச்சரவையின் கொள்கை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதன்படி 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்டது. இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என சட்டமா அதிபரும் பரிந்துரை செய்திருந்தார்.

இதனையடுத்து, 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22வது திருத்தச் சட்டம் முதலில் ஜூன் 06ஆம் திகதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அது தொடர்பான விவாதம் பல தடவைகள் இணக்கப்பாட்டுக்கு வராத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

22 வது அரசியலமைப்பு திருத்தமானது, 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்ததன் பின்னர் ஜனாதிபதிக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கிய அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ரத்து செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

22இன் கீழ், ஜனாதிபதி, அமைச்சரவை, தேசிய சபை, பதினைந்து குழுக்கள் மற்றும் மேற்பார்வைக் குழுக்களும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்திற்கான முன்மொழிவுகள் ஜூன் 29, 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டன.