ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆரின் மகள் ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுப்பு

#India #Death
Prasu
2 years ago
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆரின் மகள் ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுப்பு

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆரின் இளைய மகள் காந்தாமனேனி உமா மகேஸ்வரி இறந்த நிலையில், அவரது ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், நடிகருமான மறைந்த என்டிஆரின் 12 பிள்ளைகளில் இளையவர்தான் உமா மகேஸ்வரி. ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. 

இவர் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மனைவியின் தங்கை ஆவார்.

அவரது இறப்பு செய்து குறித்து அவரது சகோதரரும், நடிகருமான பாலகிருஷ்ணாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர் இப்போது அமெரிக்காவில் உள்ளார். உமா மகேஸ்வரிக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக அவர் மன அழுத்ததில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 

தற்கொலைக்கு அது காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் என்.டி.ராமா ராவ். இவர் என்டிஆர் என பரவலாக அறியப்படுகிறார். 

சுயமரியாதை வேண்டியும், காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கும் நோக்கிலும் கடந்த 1982-இல் தெலுங்கு தேசம் கட்சி எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். 

ஒன்பது மாதங்களில் ஆட்சியை பிடித்தது அவரது கட்சி. அதன் பின்னர் இரு முறை ஆந்திர மாநில முதல்வராக பணியாற்றியுள்ளார். 72-வது வயதில் என்டிஆர் மரணமடைந்தார். 

அவரது மருமகனும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கட்சியில் எழுப்பிய கிளர்ச்சி காரணமாக பதவியை இழந்தார்.

என்டிஆருக்கு மொத்தம் 8 மகன்கள் மற்றும் 4 மகள்கள். அண்மையில் உமா மகேஸ்வரியின் மகள் திருமண விழாவில் என்டிஆரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

என்டிஆரின் மகன்களில் மூவர் இதற்கு முன்னதாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.