3-வது டி20 போட்டி- இந்தியா அபார வெற்றி!

#India Cricket #Cricket
Kobi
2 years ago
3-வது டி20 போட்டி- இந்தியா அபார வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக பிராண்டன் கிங் மற்றும் கெய்ல் மேயர்ஸ் களம் இறங்கினர்.

பிராண்டன் கிங் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கெய்ல் மேயர்சுடன் கேப்டன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார்.அதிரடியாக ஆடிய மேயர்ஸ் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினர். இந்த ஜோடியில் ரோகித் சர்மா 11 (5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் தசைபிடிப்பு காரணமாக வெளியேறினார்.

அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். ஸ்ரேயாஸ் அய்யர் 24 (27) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 76 (44) ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 4 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் சீரான ரன்குவிப்பில் ஈடுபட்ட ரிஷப் பண்ட் மற்றும் தீபக் ஹூடா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

முடிவில் ரிஷப் பண்ட் 33 (25) ரன்களும், தீபக் ஹூடா 10 (7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 19 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.