அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பீர் குவளையை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Kanimoli
2 years ago
 அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பீர் குவளையை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது, ​​கோட்டையிலுள்ள அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பீர் குவளையை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ரங்கம பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான சந்தேக நபர் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்பதுடன் குருநாகலில் வெல்லவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மேலும் இரு நண்பர்களுடன் ஜூலை 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும், எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்ட அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நினைவுப் பொருளாக கொண்டு சென்ற பீர் குவளை
அதன் பின்னர், அதிபரின் இல்லத்தில் இருந்த பீர் போத்தலைக் கைப்பற்றிய குழுவினர், அந்த வளாகத்தில் இருந்த பீர் குவளைகளை பயன்படுத்தி மது அருந்தினர். சந்தேக நபர் பீர் குவளையை நினைவுப் பொருளாக மீண்டும் தனது வீட்டிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

அந்த நபர் அதிபரின் வீட்டில் தனது நண்பர்களுடன் பீர் குவளையுடன் இருந்த புகைப்படத்தை தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் பகிர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பான முகநூல் உள்ளடக்கம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அபரின் வீட்டிற்கு சட்டவிரோதமாக பிரவேசித்தமை மற்றும் பொருட்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், குறித்த பீர் குவளையை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.