சர்வகட்சி அரசாங்கத்தில் ஜோன்ஸ்டன் - மஹிந்தானந்த - ரோஹித - லான்சா ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு யோசனை

Prathees
2 years ago
சர்வகட்சி அரசாங்கத்தில் ஜோன்ஸ்டன் - மஹிந்தானந்த - ரோஹித - லான்சா ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு யோசனை

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதில் தமது மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு யோசனையொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுடன் கட்சியின் சிரேஷ்டர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னி ஆராச்சி, எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் நிமல் லான்சா ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை இருபத்தெட்டு அமைச்சுக்கள் வர்த்தமானியாக வெளியிடப்பட்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சர்வகட்சி அரசாங்கத்தில் முப்பது கேபினட் அமைச்சர் பதவிகளும், முப்பது இராஜாங்க அமைச்சர் பதவிகளும் நியமிக்கப்படவுள்ளதாகவும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அமைச்சர்களின் வீச்சும் மாறும் எனவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்காக அந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பி.எம். ஜீவன் தொண்டமான், தேசிய காங்கிரஸ் தலைவர் பி.எம். ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணித் தலைவர்  விக்னேஸ்வரனுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.