தடைசெய்யப்பட்ட பொருட்களை விமான நிலையத்தின் ஊடாக கொண்டு வரவேண்டாம்! சுங்கப் பணிப்பாளர் எச்சரிக்கை

Mayoorikka
2 years ago
தடைசெய்யப்பட்ட பொருட்களை விமான நிலையத்தின் ஊடாக கொண்டு வரவேண்டாம்! சுங்கப் பணிப்பாளர் எச்சரிக்கை

தடைசெய்யப்பட்ட மற்றும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் அல்லது வர்த்தக பொருட்களை அல்லது உடன் வராத பயணிகளின் பொருட்களையோ விமான நிலையத்தினூடாகவோ எடுத்து வருவதை தவிர்க்குமாறு இலங்கை சுங்கம் இன்று அனைத்து பயணிகளுக்கும் அறிவித்துள்ளது. 

அண்மைய காலங்களில் பயணிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவது அதிகரித்துள்ளதை அடுத்தே இந்த கோரிக்கையை, அனைத்து பயணிகளுக்கும் சுங்கப் பணிப்பாளர் பி.பி.எஸ்.சி.நோனிஸ் விடுத்துள்ளார்.

தடைசெய்யப்பட்ட பொருட்களில் தங்கம், சிகரெட், மருந்து அலங்கார செடிகள் போன்ற பொருட்களும் நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி பிரச்சினைகளால் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பொருட்களும் இதில் அடங்கும்.

மேலும்இ சில பயணிகள் சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகளை மீறி வணிக அளவுகளில் பொருட்களை கொண்டு வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

எனவே, விமான நிலையம் வழியாக குறித்த பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறினால் கொண்டுவரப்பட்ட அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்யப்படும்.

அத்துடன் சுங்கச் சட்டம் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் என்றும் சுங்கப் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்