இளைஞர்கள் அதிகளவு மது குடிக்க வேண்டும்- ஜப்பான் அரசின் அறிவிப்பால் சர்ச்சை
ஜப்பானில் கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இளைஞர்களிடம் மது அருந்தும் பழக்கம் குறைந்து உள்ளது. மூத்த தலைமுறையினரோடு ஒப்பிடும் போது இளைஞர்கள் குறைவாகவே மது அருந்துகின்றனர்.
இதனால் அரசுக்கு வரி வருவாயில் அதிகளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இளைஞர்கள் மது அருந்துவதை குறைந்ததுதான் காரணம் என்பதை அந்நாட்டின் தேசிய வரி முகமை அமைப்பு கண்டறிந்தது.
ஜப்பானில் 1995-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 100 லிட்டர் மது அருந்தி வந்துள்ளார். 2020-ம் ஆண்டுக்கு ஒரு நபர் ஆண்டு 75 லிட்டர் மது அருந்தி உள்ளார்.
இதையடுத்து வரி வருவாயை பெருக்க இளைஞர்கள் அதிகளவு மது குடிக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதற்காக சேக் விவா என்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
இந்த பிரசாரம் மூலம் குடிப்பழக்கத்தை இளைஞர்களிடம் பிரபலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. 20 முதல் 39 வயதுள்ள ஜப்பானியர்களிடம் குடிப்பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என யோசனைகள் கேட்கப்பட்டு உள்ளன.
மது விற்பனை அதிகரிக்க புதிய யோசனைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிறந்த யோசனைகள் வழங்குபவர்களுக்கு பரிசு, விருது வழங்கப்படுகிறது. இப்போட்டி செப்டம்பர் 9-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.