பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு நடவடிக்கை: கல்வி அமைச்சு

Mayoorikka
2 years ago
பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு நடவடிக்கை: கல்வி அமைச்சு

அடுத்த வருடத்திற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16,483 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கும், பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கும், விடை எழுதுவதற்கும் தேவையான காகிதாதிகள் மற்றும் எழுதுகருவிகள் இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் காகித தேவைகளையும் இதனூடாக பூர்த்தி செய்ய கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் கீழ் உள்ள அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் மொத்த பாடப்புத்தகங்களில் 45 வீதத்தை அச்சிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதவிர, 45 சதவீதம் அச்சு நிறுவனத்துக்கும், மீதமுள்ள 55 சதவீத பாடப்புத்தகங்கள் கொள்முதல் முறையில் தெரிவு செய்யப்பட்ட தனியார் அச்சகங்களுக்கு, அவர்களின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய கடன் திட்டத்தின் கீழ், வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.