கனடாவில் ஒன்றரை வயது குழந்தை சுட்டுக்கொலை - 3 பொலிஸார் மீது குற்றச்சாட்டு
2020ம் ஆண்டு ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் மூன்று கனேடிய பொலிஸ் அதிகாரிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது.
நவம்பர் 26, 2020 அன்று ரொறன்ரொவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் உள்ள கவார்தா ஏரிகளில், ஒன்றரை வயது குழந்தையான ஜேம்சன் ஷாபிரோ தனது தந்தைக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது உயிரிழந்தார். ஷாபிரோ சுடப்பட்டபோது அவரது தந்தையின் பிக்கப் டிரக்கில் இருந்தார், அவர் சமய இடத்திலேயே உடனடியாக இறந்தார்.
இந்த வழக்கு கனடாவில் தேசிய தலைப்புச் செய்திகளாக உருவெடுத்தது, அங்கு துப்பாக்கிகள் தொடர்பான சம்பவங்கள் வன்முறைக் குற்றங்களில் மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன.
சிறப்பு புலனாய்வுப் பிரிவின் (SIU) இயக்குநர் ஜோசப் மார்டினோ, 18 மாத குழந்தையான ஜேம்சன் ஷாபிரோவின் மரணம் தொடர்பாக மூன்று ஒன்ராறியோ மாகாண காவல்துறை (OPP) அதிகாரிகள் கிரிமினல் குற்றங்களை இழைத்ததாக நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்று கூறியதாக SIU ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, இயக்குநர் மார்டினோ ஒவ்வொரு அதிகாரி மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார், என்று SIU கூறியது. மேலும், இந்த வழக்கு இப்போது நீதிமன்றத்தின் விஷயமாக இருப்பதால், இந்த விசாரணையைப் பற்றி மேலும் கருத்து எதுவும் தெரிவிக்காது SIU தெரிவித்துள்ளது.