அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய அணுகுமுறை

Mayoorikka
2 years ago
அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய  அணுகுமுறை

அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய அணுகுமுறையொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் பெறுவதற்காக விண்ணப்பப் படிவத்தை அனுப்பும் போது முகவரியுடன், தொலைபேசி இலக்கம், வட்ஸ்அப் இலக்கம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றையும் குறிப்பிடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, விண்ணப்பதாரிகளைக் கோரியுள்ளது.

கடிதங்கள் மூலம் கோரப்படும் தகவல்களை அனுப்புவதில் ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கிடையில் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

பொதுமக்களின் வசதிக்காக செயற்படுவது அனைத்து அமைச்சுக்களினதும் அரச அதிகாரிகளினதும் தலையாய பொறுப்பாகும். எனவே எந்தவொரு நபருக்கும் இடையூறு ஏற்படாத வகையில், செயல் திறன்மிக்க சேவையை வழங்க வேண்டும். இதன் மூலம் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் முறையான பதில் அளிக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்குவது கட்டாயம் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.