வடக்கு – கிழக்கில் உள்ள அனைத்துக் கட்சிகளும், ஒருமித்த குரலாக, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்!

Mayoorikka
2 years ago
வடக்கு – கிழக்கில் உள்ள அனைத்துக் கட்சிகளும், ஒருமித்த குரலாக, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்!

வடக்கு – கிழக்கில் உள்ள அனைத்துக் கட்சிகளும், ஒருமித்த குரலாக, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என, மன்னார் முசலி பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில், நூறு நாட்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயல் திட்டத்தின் 33 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம், இன்று, மன்னார் சிலாபத்துறையில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில், அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில், இன்று காலை 10.30 மணியளவில், முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள, சிலாபத்துறை பேரூந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது.

இதில், சட்டத்தரணி எஸ்.டினேசன், கிராம மட்ட அமைப்புகள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மன்னார் மெசிடோ மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணைய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது, பொது மக்களால், 100 நாள் செயற்திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டதுடன், வருகை தந்த பொது மக்களுக்கு, அரசியல் தீர்வு திட்டம் மற்றும் 13 ஆம் திருத்த சட்டம் குறித்த, சாதக பாதக விளைவுகள் தொடர்பாக, சட்டத்தரணி எஸ்.டினேசன் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், அரசியல் தீர்வு விடயத்தில், மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் உள்வாங்கப்பட்டதுடன், மக்களும், பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற மக்களாகிய எங்களுக்கு, கௌரவமான அரசியல் உரிமை ஒன்று இருக்கிறது எனவும், வடக்கு கிழக்கில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும், ஒருமித்த குரலாக இருக்க வேண்டும் எனவும், மக்கள், கோரிக்கை முன்வைத்தனர்.