திடீரென பெய்த ஆலங்கட்டி மழை - பச்சிளம் குழந்தை மீது விழுந்து உயிரிழப்பு - ஸ்பெயினில் அதிர்ச்சி

Prasu
2 years ago
திடீரென பெய்த ஆலங்கட்டி மழை - பச்சிளம் குழந்தை மீது விழுந்து உயிரிழப்பு - ஸ்பெயினில் அதிர்ச்சி

ஸ்பெயின் நாட்டில் உள்ள வடகிழக்கு பகுதியில் கேட்டாலோனியா அமைந்துள்ளது. இந்த பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இந்த ஆலங்கட்டிகள் ஒரு டென்னிஸ் பந்து அளவுக்கு இருந்துள்ளது. இந்நிலையில் ஆலங்கட்டி மழை பெய்த போது சாலையில் நடந்து சென்றவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு வீட்டின் மேற்கூரைகள், ஜன்னல்கள் போன்றவைகளும், சாலையில் நின்று கொண்டிருந்த கார் கண்ணாடிகளும்  உடைந்து சுக்கு நூறாகியது.

அதன் பிறகு 20 மாத பச்சிளம் குழந்தையின் தலையில் ஒரு ஆலங்கட்டி விழுந்ததில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆலங்கட்டி மழை 10 நிமிடமே பெய்த நிலையில், மீண்டும் ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2002-ம் ஆண்டிற்கு பிறகு மிகப்பெரிய ஆலங்கட்டி மழை பெய்தது இதுவே முதல்முறை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.