கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் 2900 மில்லியன் ரூபா பணம் அநியாயமாக வீணடிக்கப்பட்டுள்ளது - பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Kanimoli
2 years ago
கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் 2900 மில்லியன் ரூபா பணம் அநியாயமாக வீணடிக்கப்பட்டுள்ளது - பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

இலங்கையில் கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் 2900 மில்லியன் ரூபா பணம் அநியாயமாக வீணடிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை காரணமாக கடந்த காலங்களில் இலங்கைக்கு எரிபொருள் ஏற்றி வந்த கப்பல்களுக்கான கட்டணத்தைச் செலுத்தமுடியாமல் கப்பல்கள் பல நாட்கள் கடலில் தரித்து நிற்க வேண்டி ஏற்பட்டிருந்தது.

சில கப்பல்கள் ஒரு மாதம் வரையான காலம் வரை கடலில் எரிபொருளுடன் கொழும்புத்துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிட்டுக் காத்திருந்தன.

இதன் காரணமாக கப்பல்களுக்கான தாமதக் கட்டணமாக பெருந்தொகைப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அனைத்துக் கப்பல்களுக்கும் தாமதக் கட்டணம் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக செலுத்தப்பட்ட மொத்த தாமதக் கட்டணம் 80 இலட்சம் அமெரிக்க டொலர்கள் எனவும், இந்த தொகை இலங்கை ரூபா மதிப்பில் 2900 மில்லியன் ரூபாவெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான டொலர் கையிருப்பில் உள்ளமையினால் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.