இலங்கையில் அடைக்கலம் கேட்ட நித்தியானந்தா சாமி -ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிவிப்பு

Prasu
2 years ago
இலங்கையில் அடைக்கலம் கேட்ட நித்தியானந்தா சாமி -ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிவிப்பு

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை ஜனாதிபதி செயலகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

நித்தியானந்தா சாமி இலங்கையில் அடைக்கலம் கோரி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையில் அடைக்கலம் வழங்குமாறு நித்தியானந்தா சாமி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த செய்தியை ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது. அத்துடன் இந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில், கடிதம் குறித்து எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, சட்ட ரீதியாக நாட்டுக்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் ஊடாக ஆவணங்களை சமர்ப்பித்து வீசா பெற்றுக் கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.