நாட்டை நாசமாக்கிய ராஜபக்சக்களை சும்மாவிடமாட்டார்கள் - சரத் பொன்சேகா

Kanimoli
2 years ago
 நாட்டை நாசமாக்கிய ராஜபக்சக்களை சும்மாவிடமாட்டார்கள் - சரத் பொன்சேகா

“போராட்டக்காரர்கள் அடங்கிவிட்டார்கள் என்றும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் சுதந்திரமாக அரசியலில் இறங்கலாம் என்றும் அரசு கனவு காண்கின்றது.

ஆனால் போராட்டக்காரர்களின் கொதிநிலை இன்னமும் அடங்கவில்லை. நாட்டை நாசமாக்கிய ராஜபக்சக்களை அவர்கள் சும்மாவிடமாட்டார்கள்.

ராஜபக்சக்கள் மட்டுமல்ல இந்த அரசே கூண்டோடு நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிலை வரும்.”என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது;

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு அவசரமாக அழைத்ததன் உண்மையான நோக்கம் என்ன?

அடுத்த மாதம் ஜெனிவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் வெளிநாடுகளில் அடைக்கலம் கோரிய கோட்டாபயவை நாட்டுக்கு அரசு அவசரமாக அழைத்துள்ளது.

இந்த அவசர அழைப்பின் பின்னணி என்ன? மக்களுக்குப் பயந்தே, நாட்டைவிட்டுத் தப்பியோடி ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய விலகியிருந்தார்.அவர் மீண்டும் நாட்டுக்கு வர விரும்பவில்லை.

இந்நிலையில், அவருக்கு விசேட பாதுகாப்பை வழங்கி அவரை அரசு ஏன் மீள் அழைத்தது?” என அவர் பல கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.