தீவிரவாத வழக்கில் என்னை சிறையில் அடைத்தால் ஆபத்தாக மாறிவிடுவேன்-இம்ரான் கான் எச்சரிக்கை

#Pakistan #ImranKhan
Prasu
2 years ago
தீவிரவாத வழக்கில் என்னை சிறையில் அடைத்தால் ஆபத்தாக மாறிவிடுவேன்-இம்ரான் கான் எச்சரிக்கை

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று நடந்த போராட்டத்தில் பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்பட்டது. எனவே, அவர் மீது தீவிரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், அவர் இம்மாதம் 12ஆம் தேதி வரை ஜாமீனில் இருக்கிறார்.

அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதற்கு முன் இம்ரான் கான், பெண் நீதிபதி குறித்து ஆத்திரமூட்டும் வகையில் தான் பேசியதற்கு ஆழ்ந்த வருத்தம் கூறியிருந்தார். அவரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பேச வேண்டும் என்று நினைக்கவில்லை எனவும் அவ்வாறு அவரின் மனம் காயப்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

நேற்று அவர் உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நீதிமன்றத்தின் வெளியில் அதிகமான அதிகாரிகள் எதற்காக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்? என்னை எதிர்த்து தீவிரவாத வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணையின் படி என்னை சிறையில் அடைத்தால், மேலும் ஆபத்துக்குரியவனாக மாறிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.