கிளிநொச்சி வைத்தியசாலையில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

Mayoorikka
1 year ago
 கிளிநொச்சி வைத்தியசாலையில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 46 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இதனால் நோயாளர்கள் பலர் தமக்கான மருந்துகளை வெளியிடங்களில் பெற வேண்டிய நிலை காணப்படுவதாவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களுக்கும் அதே போல முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு பகுதி மக்களுக்குமான சிகிச்சை வழங்கும் ஒரு பிரதான வைத்தியசாலையாக காணப்படும் மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்வேறு மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

குறிப்பாக சிறுவர்களுக்கான பாணி மருந்துகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான குறிப்பிட்ட சில மருந்துகள் இல்லாத நிலை காணப்படுகின்றது இதன் காரணமாக சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் சிலருக்கு வைத்தியசாலையில் இல்லாத மருந்துகளை வெளியிடத்தில் பெற்றுக் கொள்ளுமாறு சிட்டைகள் வழங்கப்படுகின்றன. 

குறிப்பாக மாதாந்த கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகள் இல்லாத நிலையிலும் அவற்றை வெளியிடங்களில் பெற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கான சிட்டைகள் வழங்கப்பட்டு வருகிறன. 

இவ்வாறு குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக சுமார் 100 கிலோ மீட்டருக்கு அப்பாற்பட்ட தூரத்தில் இருந்து சென்று சிகிச்சை பெற்று வரும் இவ் வைத்தியசாலையில் மேற்படி மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற மருந்து தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் கொடையாளர்களின் உதவியுடன் சில மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.