முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றக் கோரி போராட்டம்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றக் கோரி தொடர் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (03.10.2022) காலை ஆறு மணிக்கு நீரியல் வளத்துறை அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசம் ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்தன.
கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகம் முற்றுகை
முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலத்தினை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட்டதால் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், தமக்குரிய தீர்வு கிடைக்கும் வரை முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அலுவலகம் முன்பாக பந்தல் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.



