ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 6ஆம் திகதி சபை வாக்கெடுப்பு நடத்தும் தீர்மானம்

Kanimoli
1 year ago
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 6ஆம் திகதி சபை வாக்கெடுப்பு நடத்தும் தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்றி, ஒக்டோபர் 6ஆம் திகதி சபை வாக்கெடுப்பு நடத்தும் தீர்மானம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன.

வெளிவரும் விடயங்களின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்கால தீர்மானம் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலுக்கு பொறுப்பானவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குறித்த தீர்மானம் செல்லுபடியாகும் என்பதால், பொறுப்புள்ள அரசியல் தலைமையை ஆட்டிப்படைக்கும் என்பது உறுதி என்று செய்தித்தாள் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கத்திற்கு இந்த தீர்மானம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து மோசமடைந்துள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியானது பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் மற்றும் இலங்கை மக்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகளின் நிலைமையை கண்காணித்து அறிக்கையிடுவதை மேம்படுத்துமாறு உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை இந்த தீர்மானம் கோருகின்றது.

மனித உரிமைகள் பேரவைக்கு அதன் ஐம்பத்து மூன்றாவது மற்றும் ஐம்பத்து ஐந்தாவது அமர்வுகளில் ஒரு வாய்வழி புதுப்பிப்பு மற்றும் அதன் ஐம்பத்து நான்காவது அமர்வில் எழுத்துப்பூர்வ புதுப்பிப்பு மற்றும் அதன் ஐம்பத்து ஏழாவது அமர்வில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான கூடுதல் விருப்பங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையை வழங்கவேண்டும் என்று இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரைவு தீர்மானத்தின் முழு உரை ஒக்டோபர் 6ஆம் திகதியன்று வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்போது உறுப்பு நாடுகள் வாக்களிப்பதற்கு முன்கோரிக்கை விடுத்தால் வரைவு உரையில் மேலும் திருத்தங்கள் சாத்தியமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.