நேபாளில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 16 பேர் மரணம் - 35 பேர் படுகாயம்

நேபாளம் பாரா மாவட்டம் நாராயன்காத் என்ற இடத்தில் இருந்து பிர்குஞ்ச் என்ற இடத்துக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தில் 50 பேர் பயணம் செய்தனர். அப்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென அங்குள்ள ஆற்றில் கவிழ்ந்தது.
இதில் பேருந்துக்குள் சிக்கி கொண்ட பயணிகள் உயிர் பயத்தில் அலறினார்கள். இது பற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக இறந்தனர். 35 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முதல்கட்ட விசாரணையில் பேருந்தை ஓட்டுனர் வேகமாக ஓட்டி சென்றதே காரணம் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. நேபாள நாட்டை பொறுத்தவரை அங்கு ரோடுகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. மேலும் பெரும்பாலான பகுதிகள் மலைத் தொடர்களால் சூழப்பட்டு உள்ளதால் ரோடுகள் வளைவாக அமைந்துள்ளது.
இதனால் அடிக்கடி விபத்து நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது



