மனநிலை பாதிக்கப்பட்டவராகவே விமல் வீரவன்ச சிங்களதேசத்தில் பார்க்கப்படுகிறார் - சிவஞானம் சிறிதரன்

Kanimoli
1 year ago
 மனநிலை பாதிக்கப்பட்டவராகவே விமல் வீரவன்ச சிங்களதேசத்தில் பார்க்கப்படுகிறார் - சிவஞானம் சிறிதரன்

தமிழர்கள் என்ன செய்தாலும் அதற்கு எதிரான கருத்துக்களையே பேச வேண்டும் என்று நினைக்கின்ற மனநிலை பாதிக்கப்பட்டவராகவே விமல் வீரவன்ச சிங்களதேசத்தில் பார்க்கப்படுகிறார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,   இவரை சிங்கள மக்கள் சிறந்த தலைவராக கணிக்கவில்லை சிங்கள மக்கள் ஒரு நல்ல தலைவராக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவரிடம் இல்லை இனவாதத்திற்கு எதிராக சிங்கள மக்கள் தற்பொழுது எழும்பி இருக்கிறார்கள்.

தியாகி திலீபன் அவர்கள் இந்த மண்ணிலே உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை மக்களுக்காக தியாகம் செய்தவர். இதே விமல் வீரவன்ச அவர்கள் இருந்த ஜே.வி.பி கட்சியும் போராடி இலங்கையிலே கிளர்ச்சி செய்து இலங்கையில் இருக்கும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக போராடி இறந்திருக்கிறார்கள்.

அவர்களை நினைவு கூறுவதற்கு இந்த நாட்டில் ஒரு நியாயம் இருக்கின்றது என்றால் இந்த மண்ணிலே தமது இழந்து போன இறைமையை மீட்பதற்காக போராடிய ஒரு இளைஞர் பரம்பரையின் நினைவு நாளை நினைவு கூற ஏன் எமக்கு தடை விதிக்கப்படுகிறது.

தியாகி திலீபன் அவர்களை நினைவு கூறுவதற்குரிய அனைத்து உரித்துக்களும் சர்வதேச விதிமுறைகளுக்கும் ஐநாவுடைய தீர்ப்பாயத்தினுடைய சட்ட விதிமுறைகளுக்குமையவும் தமிழர்களுக்கு உரித்து உண்டு.

ஒரு தனியான மொழி பேசுகின்ற வரலாற்று அடையாளங்களை கொண்ட தன்னுடைய தேசத்திலே வாழ்கின்ற ஒரு இன குழுமம் தனக்காக இறந்து போனவர்களை நினைவு கொள்கின்ற தனக்காக வாழ்ந்தவர்களை நினைக்கின்ற அனைத்து உரிமைகளும் உலக பட்டையத்தின் அடிப்படையிலயே உண்டு.

விமல் வீரவன்ச முதலில் பாடசாலை செல்ல வேண்டும் பாடசாலை சென்றால் தான் இந்த அறிவுகள் தெரியும் விமல் வீரவன்ச போன்றவர்களுக்கு பாடசாலை அனுப்பி புனர்வாழ்வு பெற்று வந்தால்தான் உலகம் என்ன நாடு என்ன வரலாறு என்ன என்பது புரியும், விமல் வீரவன்ச போன்றவர்களின் கூச்சலுக்காக நாங்கள் பயப்பிடவேண்டியதில்லை.

எமது பணிகள் எந்தவொரு அச்சமும் இல்லாமல் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்திருந்தார்.