சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் பலத்த சேதம்

Prathees
1 year ago
சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் பலத்த சேதம்

நேற்று முன்தினம் இரவு முதல் காலி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நேற்று (13) பிற்பகல் வரை 87 குடும்பங்களைச் சேர்ந்த 487 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் காலி மாவட்ட அனர்த்த நிவாரண சேவை மையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் காலி கடவத் சதாரா பிரதேச செயலகப் பிரிவிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர்.

பியதிகம, தங்கேதர மற்றும் தெட்டுகொட கிராமிய சேவைப் பகுதிகளில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இமதுவ, ஹபராதுவ, தவலம, எல்பிட்டிய, போபே பொத்தல மற்றும் ரத்கம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 107 உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எல்பிட்டிய மேல் கிழக்கு ஆரம்ப பாடசாலையின் கட்டிடத்தின் மீது மரமொன்று வீழ்ந்ததில் அது சேதமடைந்துள்ளதுடன், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அனர்த்த நிவாரண சேவை நிலையம் தெரிவித்துள்ளது.

காலி புகையிரத நிலையத்திற்கு அருகில் மினுவாங்கொட பிங்கயாவிற்கு அருகில் புகையிரத பாதையில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் கரையோர புகையிரத சேவையும் தடைப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட அனர்த்த நிவாரண நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

திடீர் வெள்ளம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக நெலுவ, தவலம, நாகொட போன்ற பகுதிகளில் படகுச் சேவை தயார் செய்யப்பட்டுள்ளது.