இன்றைய வேத வசனம்19.10.2022: அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம்19.10.2022: அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்

முதலாம் நூற்றாண்டில், பரி. பவுல், இயேசு கிறிஸ்துவால் சந்திக்கப்படுவதற்கு முன்புவரை, 'சவுல்' என்கிற பெயரில் அழைக்கப்பட்டார்.

அவர், யூத மதத்தில் 'பரிசேயர்' பிரிவைச் சார்ந்த, தீவிரமான பக்தியுள்ளவராக இருந்தார்.
இந்த பவுல், தன்னுடைய மதத்தின் மீது, தான் கொண்டிருந்த வெறித்தனமான பற்று காரணமாக, அன்றைய நாட்களில் கிறிஸ்தவர்களைப் பிடித்துத் துன்புறுத்தி, கொலை செய்தார்.

 அந்தக் காலக் கட்டத்தில், கிறிஸ்தவர்களைப் பிடித்து சிறைச்சாலைக்கு அனுப்புவதும், அவர்களைக் கொலை செய்வதும்தான் அவருடைய முக்கியமான வேலையாக இருந்தது.

முதல் இரத்த சாட்சியாகிய, 'ஸ்தேவான்' என்கிற ஒரு தேவ மனிதன் கல்லெறிந்து கொல்லப்படுவதற்கு, இந்த பவுல்தான் ஒரு முக்கியமான காரணமாக இருந்தார். (அப்போஸ்தலர் 6,7 அதிகாரங்கள்).
ஒருநாள், பவுல் தமஸ்குவுக்குப் போகிற வழியில் கர்த்தர் அவரை சந்தித்து, அவருடைய மனக் கண்களைத் திறந்தார். 

அப்போது அவர், தான் ஒரு பாவி என்பதை உணர்ந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு தன்னை அர்ப்பணித்தார். 

"இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களை கொலை செய்வதுதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு!" என்று நினைத்துக் கொண்டிருந்த அவரை கிறிஸ்துவினுடைய வல்லமை தொட்டபோது, அவருடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டன.

அதற்குப் பின்பு அவன் தன் கடைசி மூச்சு வரைக்கும் கிறிஸ்துவுக்காக உழைத்து தன் ஓட்டத்தை முடித்துக் கொண்டார்.

நாமும் நம்முடைய வாழ்க்கையிலும், “நாம் செய்து கொண்டிருக்கிற எல்லாக் காரியங்களும் கர்த்தருக்குப் பிரியமானது தானா?” என்று சற்று ஆராய்ந்து பார்த்து, தேவ சமூகத்தில் நம்மை அர்ப்பணித்து தேவனுக்கு பிரியம் இல்லாத காரியங்களை விடும் பொழுது, கர்த்தர் நம்மைக் கொண்டும் பெரிய காரியங்களைச் செய்வார். ஆமென்!

அதற்கு அவன் (பவுல்): ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்...அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்." (#அப்போஸ்தலர். 9:5,9).