பெருமை பேசி நாட்டை கட்டியெழுப்ப முடியாது – சஜித்

Mayoorikka
1 year ago
பெருமை பேசி நாட்டை கட்டியெழுப்ப முடியாது – சஜித்

நாட்டுக்குத் தேவை அடக்குமுறையல்ல எனவும்,அபிவிருத்தியே தேவை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அரசாங்கம் அடக்குமுறையையே அமுல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

பெருமையடித்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இதயசுத்தியுடன் சேவை செய்வதே மேற்கொள்ள வேண்டியுள்ள தேவை எனவும் தெரிவித்தார்.

மக்களுக்கு தாம் வாழ்வதற்கான போராட்டமே உள்ளதாகவும்,தனது அதிகாரத்தைக் தக்க வைத்துக் கொள்வதான போராட்டமே அரசாங்கத்திற்குள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது பிள்ளைகளுக்கு சரியான உணவை வழங்கி கல்வியை வழங்குவதற்கே பெற்றோர்கள் போராடுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அமைச்சர்களை நியமிப்பது தொடர்பான போராட்டமே அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டின் இளம் தலைமுறையினர் தொழில் செய்து தலை நிமி்ர்ந்து வாழ்வதற்கான போராட்டத்திலையே ஈடுபட்டுள்ள போது, அரசாங்கம் இளைஞர்களை ஒடுக்குவதாகவும், இந்நாட்டின் குழந்தைகள் அழகான நாட்டை உருவாக்க கனவு காணும்போது டீல் போட்டு பணம் சம்பாதிக்கும் போராட்டத்திலையே அரசாங்கம் ஈடுபட்டுவருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சுத் திட்டத்தின் 53 ஆவது கட்டமாக மஹரகம பல் மருத்துவ நிருவனத்திற்கு 550,000 ரூபா பெறுமதியான பல் சத்திர சிகிச்சை உபகரணங்களை அன்பளிப்பு செய்யும் நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெற்றது.

நாட்டு மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள்,ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள்,உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் “ஜன சுவய” கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ‘எதிர்க்கட்சியின் மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

இது வரை 53 கட்டங்களில் 160,266,900 ரூபா பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்கள் ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாடு வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து மீட்பதற்கு எந்நேரத்திலும் பட்டம் பதவிகள் இன்றி அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கத் தயார் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்கான உண்மையான விருப்பை அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த வேளையில் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியினால் மூச்சுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இன்று இது மிகவும் வெற்றிகரமானதொரு வேலைத்திட்டமாக இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.