பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என அறிவிப்பு!

Mayoorikka
1 year ago
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என அறிவிப்பு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் நடவடிக்கைகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு அவரை நாடாளுமன்ற உறுப்பினர் நிலையிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளதாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

எனினும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சி, இந்த தடையை உடனடியாக நிராகரித்துள்ளது.

அத்தகைய தீர்ப்பை வழங்குவதற்கான ஆணையத்தின் அதிகார வரம்பையும் அந்த கட்சி சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.

இதற்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும், ஆதரவாளர்களை தெருக்களில் இறங்கிப் போராடுமாறும் அந்த கட்சி அழைப்பு விடுத்துள்ளது

பாகிஸ்தானில் வெளிநாட்டு பிரமுகர்கள் அரச தலைவர்களுக்கு வழங்கும் பரிசுகள் தோஷாகன என்ற அரச திணைக்களத்தில் வைப்புச் செய்யப்படுகின்றன.

இந்த தோஷாகன திணைக்களம் 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்தநிலையில், கடந்த ஆண்டு இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர், வெளிநாட்டு பிரமுகர்களிடம் பெற்ற பரிசுகளை தோஷாகனாவிலிருந்து பெற்று பின்னர் அதனை விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை எதிர்கட்சி சுமத்தியிருந்தது.

இந்த குற்றச்சாட்டை விசாரணை செய்த நிலையிலேயே அந்த நாட்டின் தேர்தல் ஆணையகம் இம்ரான் கானை நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கியுள்ளது.

பாகிஸ்தானின் தோஷகனா விதிகள் அனைத்து பரிசுகளையும் திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது.

இருப்பினும், பரிசுகளை விற்பது கண்டிப்பாக சட்டவிரோதமானது அல்ல என்றாலும், பலர் அதனை நெறிமுறையற்றதாகவும் தார்மீக ரீதியற்றதாகவும் கருதுகின்றனர்.

இந்தநிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தாம் பெற்ற பரிசுகளை வேண்டுமென்றே மறைத்ததாகவும்,பின்னர் அவற்றை விற்பனை செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.