திலினி பிரியமாலி 128 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி!

Mayoorikka
1 year ago
திலினி பிரியமாலி 128 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி!

இலங்கையில் பாரியளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலி, தமிழ் அரசியல்வாதிகள் எவருடனும் தொடர்பில் இருந்தார் எனத் தகவல் எதுவும் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

எனினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருடன் அவர் தொடர்பில் இருந்தார் என தகவல்கள் கிடைத்துள்ளன எனவும், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

திலினி பிரியமாலி தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். திலினி பிரியமாலி தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய, அவர் 128 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. 

திலினி பிரியமாலிக்கு எதிராக இதுவரை மொத்தமாக 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார். 

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் திலினியின் வலையில் சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகள், கலைஞர்கள், வியாபாரிகள் எனப் பலரும் சிக்கி கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்ககது.