தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை விடவிகாரையை அமைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றார்கள் - துரைராசா ரவிகரன்

Kanimoli
1 year ago
தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை விடவிகாரையை அமைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றார்கள் - துரைராசா ரவிகரன்

தொல்லியல் திணைக்களம் தங்களுடைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை விட பௌத்த மத விகாரையை அமைக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருக்கின்றார்கள் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை விடயம் தொடர்பில் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

குருந்தூர்மலை விடயத்தை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக பூர்வீக ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தை அபகரிக்கும் நோக்கோடு அல்லது பௌத்தத்தை திணிக்கும் நோக்கோடு பலருடைய செயற்பாடும் காணப்படுகின்றது.

தொல்லியல் திணைக்களம் தங்களுடைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை விட பௌத்த மத விகாரையை அமைக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருப்பதாக தெரிகின்றது.

அதனைவிட பிக்குகள் அதிகமாக வந்து தங்களுடைய மதத்தை திணிக்கும் நோக்கமாகவே காணப்படுகின்றது. அதனைவிட முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் புறம் தள்ளி பௌத்த மத திணிப்பிற்கு ஆதரவாக செயற்படும் நிலை தான் காணப்படுகின்றது.

சைவமத வழிபாடுகளை முற்றுமுழுதாக புறக்கணிக்கும் நோக்கத்தோடு செயற்படுகிறார்கள்.

நேற்றையதினம் (27.10.2022) எங்களால் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது எதிர்வரும் (24.11.2022) அன்றைய தினத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது.

நான்கு வழக்குகள் குருந்தூர்மலைக்காக எங்கள் மீது போடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.

இதனைவிட குருந்தூர்மலை விடயம் தொடர்பாக இரண்டு அமைச்சர்கள் எதிர்வரும் 1 ஆம் திகதி நேரடி விஜயம் செய்ய இருப்பதாகவும் , இரு பகுதியினரையும் அழைத்து அது தொடர்பான விளக்கங்களையும் கோருவதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருந்தது.

இதிலே ஒரு விடயத்தை கூறுகின்றேன். தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியானது கிட்டத்தட்ட 13 கிராம மக்களுக்கு ஏற்கனவே அந்த நிலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.

தண்ணிமுறிப்பு, குமுழமுனை கிராமங்கள் மட்டுமல்ல வட்டுவாகல் வரையும் அவ் நிலங்கள் சொந்தமாக இருக்கின்றது.

இந்த மக்களுக்கு காணிகள் மட்டுமல்ல குருந்தூர்மலை, ஆதிசிவன் ஐயனார் ஆலயம் இவ்வாறு பூர்வீக சொத்துக்கள் அம் மக்களின் சொத்துக்கள்.

இன்று ஆதிசிவன் ஐயனார் ஆலயம் இருந்த இடத்தை முற்றுமுழுதாக அழித்து தொல்லியல் ஆய்விற்கென வந்தவர்கள் ஆய்வுகளை பார்க்கிறார்களோ? இல்லையோ, ஆனால் பௌத்த மத விகாரையை அமைக்கும் பணியை வேகமாக செய்கிறார்கள்.

நீதிமன்ற தீர்ப்பானது கட்டுமான பணிகள் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு மேல் ஒன்றும் கட்டக்கூடாது என்று வழங்கப்பட்ட நிலையில் கூட இதனை அத்துமீறிய செயற்பாடாகவே இருக்கின்றது.

இதனை பார்த்துக்கொண்டிருக்கின்ற பொலிஸார் இதற்கு ஒத்து செல்பவர்களாகவும், ஆதரவு வழங்குபவர்களாகவுமே காணப்படுகின்றார்கள்.

இங்கே வர இருக்கும் அமைச்சர்கள் சரியான முறையிலே ஆய்வுகள், அறிக்கைகள், ஏற்கனவே உள்ள எங்களது வழிபாட்டு தலங்கள் என்பவற்றை சரியான முறையில் ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு அரசாங்கத்தினுடைய அமைச்சர்களாக வருபவர்கள் பிழையான விடயங்களில் ஈடுபடக்கூடாது என கூறிக்கொள்கின்றேன்.

எங்களுடைய பூர்வீகம், கோரிக்கை நியாயமானது சரியான முறையில் ஆய்வுகளை மேற்கொள்வார்களாக இருந்தால் எங்களுக்கு சாதகமாகவே அமையும்" என தெரிவித்தார்.