வட மாகாணத்தில் 14 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு

Kanimoli
1 year ago
வட மாகாணத்தில் 14 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு

2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து, வட மாகாணத்தில் 14 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், வடமாகாணத்தில் 485 மாணவர்கள் பாடசாலைகளை விட்டு இடைவிலகியுளள்னர். இது கடந்த ஆண்டு 105 ஆக குறைந்துள்ளது.

ஆனால் இந்த ஆண்டு, பாடசாலை இடைவிலகியவர்களின் எண்ணிக்கை, இதுவரை 519 ஆக உயர்ந்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், மடு கல்வி வலயத்திலேயே அதிகமான மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனர். அங்கு 94 மாணவர்கள் இடைவிலகியுள்ளனர்.

மன்னாரில் கல்வி வலயத்தில் 72 பேர், கிளிநொச்சியில் 52 பேர், கிளிநொச்சி வடக்கில் 51 பேர், முல்லைத்தீவில் இருந்து 48 பேர் இடைவிலகியுள்ளனர்.

பிள்ளைகள் பாடசாலையை இடைநிறுத்துவதற்கு மிக மோசமான வறுமையே பிரதான காரணம் என வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர், எனவே பல மாணவர்கள் தங்கள் குடும்பத்தை கவனிப்பதற்காக வேலை தேடிச் சென்றுள்ளனர் என்றார்.

அவர்களில் பலர் மாகாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு வேலை தேடிச் சென்றுள்ளனர்.

மாணவிகளிற்கு இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ துணைத் தேடி பெற்றோர் திருமணம் செய்து வைப்பதாகவும், இதனால் வட மாகாணத்தில் இளவயது திருமணங்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.