இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் குறித்த தகவல்களைப் பெற அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்!

Mayoorikka
1 year ago
 இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள்  குறித்த  தகவல்களைப் பெற  அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்!

நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் யார் என்பது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, வரும் வாரங்களில் சில அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த மனுக்கள் எப்போது தாக்கல் செய்யப்படவுள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இதற்கிடையில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் 21ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களில் யார் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இரட்டைக் குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதைக் கண்டறியும் கோரிக்கையை அடுத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த வாரம் விசேட விசாரணையை ஆரம்பித்தது.

நாடாளுமன்றத்தால் குறிப்பிடப்பட்ட பிறந்த திகதி, பெயர் மற்றும் தேசிய அடையாள எண் அடங்கிய ஆவணத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் இரட்டை குடியுரிமைக்கொண்ட உறுப்பினர்கள் எவரும் கண்டறியப்படவில்லை.
இதுவரை பசில் ராஜபக்ச மாத்திரமே, இரட்டை குடியுரிமையைக் கொண்டவர் என்பது வெளியாகியிருப்பதால், எதிர்காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கோ அவருக்கு இடமில்லை 

எனினும் குடிவரவு திணைக்களத்தினால், 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்படலாம் என்று கூறப்பட்டாலும், இன்றுவரை அந்த பெயர்கள் ஊகங்களாகவே உள்ளன.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சில உறுப்பினர்களின் பெயர்களும் இதில் அடங்குகின்றன.

எனினும் டயானா கமகேயும், தமிழ் தேசியக்கூட்டமைப்பினரும் இந்த கூற்றை மறுத்துள்ளனர்.