ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்ததாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது - சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Kanimoli
1 year ago
 ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்ததாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது - சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

சுயாதீனமாக இயங்கும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்ததாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்ததாக நேற்று வெளியான செய்தி மக்களை தவறாக வழிநடத்தும் செய்தியாக மாறலாம் என்பதால், சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அது குறித்து விளக்கமளித்துள்ளார்.

நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளால் மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகி இருக்கும் சந்தர்ப்பத்தில் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகி  கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடாளுமன்றத்தில் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வருகின்றேன்.

உண்மையில் மனத்துக்கு இணங்கவே அவ்வாறு செயற்பட்டு வந்தேன். மக்களுக்காக செய்ய வேண்டிய பணிகளின் போது, ஆளும் கட்சி கொண்டு வந்த மக்களுக்கு நன்மை தரும் யோசனை ஆதரித்தும், மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்கும் யோசனைகளுக்கு எதிராகவும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எப்போதும் குரல் கொடுத்து வந்துள்ளேன்.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் நேரத்தில் பொதுவாக எதிர்க்கட்சி என்ற வகையில் மக்களுக்காக மேற்கொள்ள வேண்டிய பொது பொறுப்பு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பொது எதிர்க்கட்சியை சந்தித்து எதிர்க்கட்சியின் பொதுவான பொறுப்பை நாடாளுமன்றத்திற்குள் நிறைவேற்றுவது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டோம்.

இதன் போது ஐக்கிய கூட்டணி ஒன்றில் இணையும் சம்பவம் நடக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்.

இதனால், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்ததாக வெளியாகியுள்ள ஊடக செய்திகள் மக்களை தவறான வழி நடத்தும் தகவல் என்பதுடன் அதில் உண்மையில்லை எனவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன.

சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே, ஜயரட்ண ஹேரத், சந்திம வீரக்கொடி, அனுரபிரியதர்சன யாப்பா, பிரியங்கர ஜெயரட்ண, டபில்யூ.டீ.ஜே.செனவிரட்ண ஆகியோரே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டாக அவற்றில் தெரிவிக்கப்பட்டிருந்தன.