ஓமன் மனித கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் கைது
சுற்றுலா விசாவில் இலங்கை யுவதிகளை ஓமானுக்கு அழைத்து வந்து அந்நாட்டு கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு விற்பனை செய்த மனித கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் டுபாயில் இருந்து தீவுக்கு வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை மற்றும் வத்தளை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடையவர். இவரால் நடத்தப்படும் மருதானை பிரதேசத்தில் அனுமதியற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் நாடு முழுவதும் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களில் இருந்து இந்த கடத்தலுக்காக ஓமானுக்கு இளம் பெண்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் மூன்றாவது செயலாளராகக் காட்டிக் கொண்டு இவர் இந்த மனித கடத்தலுக்கு தலைமை தாங்கியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த மனித கடத்தல் தொடர்பில் இன்று பாராளுமன்றத்திலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.