இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் போராட்டம்

Kanimoli
1 year ago
 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் போராட்டம்

இந்தியா, தமிழ் நாடு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் தமக்கான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றம்சாட்டி அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி தொடர்ந்து பல மணி நேரம் முகாம் நுழைவாயிலில் கைக்குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களிடம் அப்பகுதிக்கான ஆட்சியர் கடுமையாக நடந்து கொள்வதாகவும், அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் வழங்கவும், தனி பதிவு வழங்கவும் லஞ்சம் கேட்பதாக மண்டபம் மறு வாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளனர்.

இது குறித்து இலங்கை தமிழர் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் மற்றும் ராமநாதபுரம் ஆட்சியரிடமும் பல முறை முறைப்பாட்டு மனு அளித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே நேற்றைய தினம் கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் போராட்ட இடத்திற்கு அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு முகாமிற்குள் சென்றனர்.

இலங்கையில் ஏற்பட்ட போரின் போது தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஈழத் தமிழர்கள் பலரும் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் தஞ்சம் அடைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர்.

அதேபோல் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அடைக்கலம் தேடி தமிழகத்திற்கு அகதிகளாக வரும் சுமார் 200 பேர் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியராக சிவகுமாரி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கும்மிடிப்பூண்டி முகாமில் இருந்து பிரசவத்திற்காக மண்டபம் முகாமில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்த குடும்பத்தை கைக்குழந்தையுடன் முகாமை விட்டு வெளியே அனுப்பியதாகவும், மண்டபம் முகாமிற்குள் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் நான்கு சக்கர வாகனத்தை முகாமிற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை கண்டித்தே மண்டபம் முகாம் தனித்துணை ஆட்சியரை உடனடியாக மாற்ற கோரி நூற்றுகணக்கான இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாம் நுழைவு வாயிலின் தரையில் அமர்ந்து கைக்குழந்தையுடன் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் தனித்துணை ஆட்சியரை மாற்றி உத்தரவிட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக திட்டவட்டமாக தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்று தனித்துணை ஆட்சியர் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசலில் சுமார் நூற்றுக்கணக்கான இலங்கை தமிழர்கள் கைக்குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.