2023 க்கான பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் அறவிடப்படும் கட்டணம் மூன்று மடங்காக அதிகரிப்பு

2023 க்கான பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் அறவிடப்படும் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் பாடசாலைகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு இதுவரை பெற்றுக்கொடுக்கப்படாமை காரணமாகவே பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் அறவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, ஆசிரியர் பணியில் உள்ள சுமார் 2000 பேர் 60 வயதில் ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்கு தகுதியானவர்களை நிரப்ப கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையான திட்டங்கள் இல்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த வெற்றிடங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படுபவர்களே நியமிக்கப்படுவதாகவும், சில சமயம் பல்கலைக்கழக பட்டதாரிகளை சேர்த்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற பின்னர், பாடசாலைகளை தேர்வு செய்து, தேவையான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.



