ஜனாதிபதி அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்ட தளபாடங்கள்: விசாரணைகளை நடத்த கோரிக்கை

தனியார் நிறுவனம் ஒன்றினால், நாடாளுமன்றில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு கட்டில் மெத்தை மற்றும் கதிரைகள் எடுத்து வரப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றில் தகவல் வெளியிடப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பான ரசீதுகளை சபையில் சமர்ப்பித்த அவர், 3லட்சத்து 42 ஆயிரம் பெறுமதியான கட்டில் மற்றும் மெத்தையும், 273ஆயிரம் ரூபா பெறுமதியான கதிரைகளும் ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்த பொருட்கள் எதற்காக கொண்டு வரப்பட்டன? என்பது தொடர்பாகவும், தனியார் நிறுவனம் ஒன்று ஏன் இந்த பொருட்களை கொள்வனவு செய்து எடுத்து வந்தது என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று புத்திக பத்திரன கேட்டுக்கொண்டார்.
இதேவேளை இந்த பொருட்களை எடுத்து வந்த நிறுவனத்துக்கு எம்பிலிபிட்டிய பகுதியில் 20 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸா விதானகே குறிப்பிட்டார்.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தப்படும் என்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்தார்.



