உயிரை பணயம் வைத்தேனும் நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை மக்கள்

Kanimoli
3 years ago
உயிரை பணயம் வைத்தேனும் நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை மக்கள்

உயிரை பணயம் வைத்தேனும் நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (09.12.2022) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாட்டினதும், அரசாங்கத்தினதும் இருப்பிற்கு வரி அறவிடல் அவசியம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். வரி அறவிடல் ஊடாக நாட்டு மக்கள் பிரதிபலனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போதை வரி திருத்தம் தமக்கு எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மக்கள் அவதானத்துடன் உள்ளார்கள். 2019ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன், ஆட்சிக்கு வர ஒத்துழைப்பு வழங்கியவர்களை திருப்திப்படுத்தவதற்காக அரசாங்கம் வரி விலக்கு செய்தது.

இதனால் பல பில்லியன் ரூபாவை அரசாங்கம் இழக்க நேரிட்டது.பொருளாதாரத்தை சீரழித்து முழு நாட்டு மக்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கிய தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் நாட்டின் நிதி மற்றும் வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை என குறிப்பிட்டு முழு நாட்டையும் தவறாக வழிநடத்தினார்.

முழு நாட்டு மக்களையும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி விட்டு, நாட்டை பிற நாடுகளிடம் கையேந்த வைத்துவிட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தற்போது நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சுகபோகமாக வாழ்கிறார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு
அது மாத்திரமல்ல பொருளாதார பாதிப்பு தொடர்பில் புத்தகம் எழுதுகிறார். பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வரி செலுத்த முடியாது என நாட்டு மக்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இது உண்மை. நாட்டு மக்களின் நம்பிக்கையை வெற்றிக் கொள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற வரி கொள்கையினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 400 இற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். மறுபுறம் தகவல் தொழிநுட்ப துறை நிபுணர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளார்கள். உயிரை பணயமாக வைத்து நாட்டை விட்டு சென்று விடலாம் என்ற நிலைப்பாட்டில் தான் பெரும்பாலான மக்கள் உள்ளார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாட்டு மக்களின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்த வேண்டும் இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு கிடையாது, ஆகவே தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய நாட்டு மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4