கன்னி ராசிக்காரர்கள் சற்றுக் கவனமுடன் செயற்பட வேண்டும் - 2023 சனிப்பெயர்ச்சி

#Astrology #Rasipalan #சனிப்பெயர்ச்சி #கன்னி #ராசிபலன் #ஆன்மீகம் #ஜோதிடம் #லங்கா4 #Lanka4
Nila
1 year ago
கன்னி ராசிக்காரர்கள் சற்றுக் கவனமுடன் செயற்பட வேண்டும் - 2023 சனிப்பெயர்ச்சி

இந்தாண்டு தைமாதம் 17ம் திகதி நிகழவுள்ள சனிப்பெயர்ச்சியில், சனி பகவான் கன்னி ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.  திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி, அங்கே அவர் இருக்கும் காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் சற்றுக் கவனமுடன் செயற்பட வேண்டும். 6-ல் சனி இருந்தால் துரோகம், சத்ருக்களால் பிரச்னைகள் எழலாம் என்பார்கள். அதேபோல் உடல் ஆரோக்கியத்திலும் கவனமுடன் செயல்படவேண்டும்.

புதிய கடன் முயற்சிகளில் வேகம் கூடாது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே கடன் வாங்குவது குறித்து யோசிக்கலாம். வீடு, வாகனம் மற்றும் தொழில் நிமித்தம் கடன் வாங்குவதிலும் அவசரம் காட்ட வேண்டாம். அலுவலகம், வழக்குகள், சொத்துப் பிரச்னைகளில் புதியவர்களை நம்பவேண்டாம். மற்றபடி வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் வாய்க்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். தன லாபமும் ஏற்படும். செய்யும் தொழில் மற்றும் தற்போது இருக்கும் வேலை ஆகியவை மாறாமல் பார்த்துக்கொள்ளவும். சிலருக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வரலாம். திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அன்பர்களுக்கு கல்யாண யோகம் கைகூடும்.

பெண்களுக்கு: பண வரவு உண்டாகும். தங்கம், வெள்ளி சேரும். பிறந்த வீடு மூலம் சொத்துகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோல் இழந்த சொத்துக்களை மீட்டெடுத்து மகிழ்வீர்கள். குழந்தைப் பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. அலுவலகம் செல்லும் பெண்கள் புதிய கடன்பெறும் முயற்சிகளில் இறங்கவேண்டாம்.

மாணவர்களுக்கு: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. படிப்பில் நல்ல கவனம் இருக்கும். ஆனால் மறதி வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே சரஸ்வதிதேவி, விநாயகரை வழிபடவும். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புவோர், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரையும் கருடாழ்வாரையும் வணங்கி வந்தால் தடைகள் நிவர்த்தி ஆகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: சம்பள உயர்வு உண்டு. இதுவரையிலுமான உங்களின் கடின உழைப்புக்குச் சன்மானம் தரும் காலம் இது. புதிய வேலைக்கான முயற்சிகள் வெற்றி பெறும். வங்கி ஊழியர்கள் சற்றுக் கவனத்துடன் செயல்படவும். ஏற்கெனவே வழக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றையும் கவனமுடன் கையாள வேண்டும். அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் அன்பர்களில் சிலருக்கு, அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

வியாபாரிகளுக்கு: புதிய கடன் முயற்சிகள் எதுவும் வேண்டாம். கடன் கொடுப்பதும் பெறுவதும் பாதகமான பலன்களையே தரும். புதுத் தொழிலில் இப்போது ஈடுபட வேண்டாம். புதியவர்கள் மூலம் வரும் வாய்ப்புகளைத் தவிர்க்கவும். ஏற்றுமதி, இறக்குமதி, பங்குச் சந்தை முதலீடுகள் உங்களுக்கு லாபம் தரும். எனினும் எதிலும் அகலக்கால் வைக்கவேண்டாம்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி நரசிம்மரை வழிபடலாம். இயன்றால் ஒருமுறை அகோபிலம் சென்று வரலாம். சனிப் பிரதோஷக் காலத்தில் நந்திதேவர், கருட பகவான் மற்றும் நரசிம்மரை வணங்குவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.