இதுவரைக்கும் ஜன்ம சனி - மகரத்துக்கு 2023 இல் என்ன மாற்றம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

#சனிப்பெயர்ச்சி #ராசிபலன் #மகரம் #ஜோதிடம் #ஆன்மீகம் #லங்கா4 #Rasipalan #Astrology #Lanka4
Nila
1 year ago
இதுவரைக்கும் ஜன்ம சனி - மகரத்துக்கு 2023 இல் என்ன மாற்றம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

மகர ராசியினருக்கு இது வரை ஜன்மச் சனியாக இருந்து பலன்தந்த சனிபகவான், 17.01.2023 நடக்கவிருக்கும் இடப்பெயர்வால், இப்போது 2 -ம் இடமாக பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார்.

ஆகவே, மகர ராசி அன்பர்கள் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விடலாம். ஆரோக்கியம், தொழில், பண விவகாரம் ஆகிய யாவும் உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.

குடும்ப ஒற்றுமை ஓங்கும். மன அழுத்தம் தீர்ந்து நன்மைகள் நடக்கும். வேலை விஷயத்தில் நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும்; பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

குடும்பத்தில் பெரியவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும். நண்பர்கள், உறவினர்கள் மூலமாக இருந்த கடன் தொல்லைகள் தீரும். வீடு, வாகனம் வாங்குவது மற்றும் மாற்றுவது யோகமாக இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சி, கூண்டுப் பறவை சிறை மீண்டது போன்ற உணர்வைத் தருவதாக அமையும்.

பெண்களுக்கு: வாழ்க்கையில் தெளிவான முடிவு எடுக்கக்கூடிய தருணம் இது. தயங்காமல் செயல்படுங்கள். மனப் போராட்டங்கள் விலகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகம் சார்ந்த பிரச்னைகள் தீரும். புதிய வேலையை எதிர்நோக்கி இருந்தவர்களுக்கு, அவர்களின் முயற்சி வெற்றி தரும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியம் வெற்றியாகும்.

மாணவர்களுக்கு: உங்களின் தேகஆரோக்கியம் மேம்படும். விரும்பிய கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேர இடம் கிடைக்கும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ- மாணவிகளுக்குச் சற்று கவனம் தேவை. நண்பர்களைத் தேர்வு செய்யும்போது கவனம் வேண்டும். அயல்நாட்டுக்குச் செல்வோர், படிப்பின் நிமித்தம் பெற்றோரைப் பிரிந்து செல்லும் மாணவக் கண்மணிகள், தங்களுடைய செயல்பாடுகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு: இதுவரையிலும் இருந்து வந்த மன அழுத்தம் நீங்கும்; வேலைப்பளு குறையும். பணி மாற்றம், சம்பள உயர்வு, இட மாற்றம் ஆகிய அனைத்திலும் உங்கள் விருப்பம் நிறைவேறும். அரசுப் பணியில் உள்ளவர்கள், வங்கியில் உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது; வீண் பழிகள் வந்து சேர வாய்ப்பு உண்டு. மேலதிகாரிகளுடன் பகைமைப் போக்கு மாறும். வேலையில் மன நிம்மதியும் அங்கீகாரமும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு: இதுவரை இருந்து வந்த மன அழுத்தம் நீங்கும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். இரும்பு, எண்ணெய், பூமி போன்ற வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். உலோகம், ரப்பர், ஜவுளி ஆகியவை தொடர்பான வியாபாரத்தில், கடன் வாங்குவதில் எச்சரிக்கை தேவை. கூட்டுத்தொழிலில் கவனம் வேண்டும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்குத் துளசி மற்றும் எலுமிச்சை மாலை சாற்றி வழிபடலாம். அமாவாசை தினங்களில் பசு மாடுகளுக்கு உணவு அளிக்கவும். மேலும், திருப்பதி ஏழுமலையான் தரிசனம் நன்மையைப் பெற்றுத் தரும்.