கும்ப ராசிக்கு ஆரம்பிக்கிறது ஜன்ம சனி - நன்மையா...? தீமையா...? 2023 சனிப்பெயர்ச்சி

#சனிப்பெயர்ச்சி #ராசிபலன் #கும்பம் #லங்கா4 #ஆன்மீகம் #ஜோதிடம் #Rasipalan #Astrology #Lanka4
Nila
1 year ago
கும்ப ராசிக்கு ஆரம்பிக்கிறது ஜன்ம சனி - நன்மையா...? தீமையா...? 2023 சனிப்பெயர்ச்சி

17.01.2023 அன்று நடைபெறவுள்ள சனிமாற்றத்தால், கும்ப ராசிக்காரர்களுக்கு ஜன்மச் சனி ஆரம்பமாகிறது. கும்பம் சனி பகவானுக்குச் சொந்த வீடு. ஆகவே நன்மைகளையே வழங்குவார். எனினும் நாம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்தால், எல்லாம் நன்மை யாகவே நடக்கும். பண விவகாரம், ஆரோக்கியம், திருமணம் போன்ற விஷயங்களில் பலமுறை யோசித்து முடிவெடுக்கவும்.

வேலை தேடும் நிலையில் உள்ளவர்கள், மாணவ மாணவிகள், வயதானவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கடன் பெறுவது, கடன் கொடுப்பது இரண்டையுமே இயன்றவரையிலும் தவிர்க்கலாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்துப் போடுவது வேண்டாமே. மேலும் சொத்துகள் வாங்கும்போது பத்திரங்களைச் சரிபார்ப்பது மிக அவசியம்.

கும்ப ராசி அன்பர்களுக்கு, ஜன்மச் சனி நன்மைகளே அளிப்பார் என்றாலும், சற்றுப் பாடத்தையும் கற்றுத் தருவார். ஆகவே, தினமும் அவரைத் தியானித்துவிட்டுச் செயல்பட்டால், சகலமும் நன்மையாக நடக்கும்.

பெண்களுக்கு: வேலைப்பளு அதிகரிக்கும்; பொறுப்புகள் கூடும். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள், எப்போதுமே உழைக்க அஞ்சாதவரகள். எனினும் தற்போது மனம் சலிக்கும் அளவுக்கு வேலை அதிகரிக்கும். மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்கவேண்டியது வரலாம். உங்களின் மன உறுதியும், தைரியமும் எல்லா காரியங்களிலும் பலம் சேர்க்கும். உடல் ஆரோக்கியத்திலும் சற்றுக் கவனம் செலுத்துங்கள்.

மாணவர்களுக்கு: நீங்கள் படிப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும். விளையாட்டுத் துறையில் சாதனை புரிவீர்கள். பாட்டு, நடனம், இயல், இசை போன்றவற்றிலும் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி வெற்றி பெறும். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. சோம்பேறித்தனத்தை விட்டால், வாழ்க்கையில் முன்னேறலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு: இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் வாக்கில் அதீத கவனம் தேவை. பேச்சால் பிரச்னைகள் எழலாம். ஆகவே, பணியிடங்களில் நாவடக்கத்துடன் நடந்துகொள்ளுங்கள். எவரிடமும் எடுத்தெறிந்து பேசுவதைத் தவிர்க்கவும். இயன்றவரையிலும் மற்றவர் களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். புதிய வேலை தொடர்பான சில முயற்சிகள் ஏமாற்றத்தைத் தரலாம். வங்கிப் பணி, அரசுப் பணி, தனியார் பணி... எந்தத் துறையில் இருந்தாலும் `இருக்கும் இடமே வைகுண்டம்' என்று இருப்பது நலம்.

வியாபாரிகளுக்கு: புது வியாபாரம், கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. ஆவணங்களில் கையெழுத்து இடுவது, ஒப்பந்தங்கள் செய்வது தொடர்பானவற்றில் கவனம் தேவை. புதிய கடன் முயற்சிகள் வேண்டாம். தன லாபம் உண்டு. சிறு தொழில் செய்பவர்களுக்கு நல்ல காலம் இது. ஜவுளித் தொழில், எண்ணெய், சிமெண்ட், கருங்கல், இரும்பு வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்கலாம். சக்கரத் தாழ்வாருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யலாம். சனிப் பிரதோஷ காலத்தில், சிவனையும் நரசிம்மரையும் வணங்கி வழிபட்டால், எல்லா வளமும் கிடைக்கும்.