இலங்கையில் நாளை ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #exam #Student #School #Ministry of Education
Nila
1 year ago
இலங்கையில் நாளை ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் கடந்த ஆண்டு நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி, பெப்ரவரி 17ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் இடையறாத மின் சேவையை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபை சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

உயர்தர பரீட்சைகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

பரீட்சார்த்திகள் இம்முறை பாடசாலையூடாக 2 இலட்சத்து 78 196 பரீட்சார்த்திகளும், 53,513 தனியார் பரீட்சார்த்திகளுமாக 3 இலட்சத்து 31,709 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். அதற்கமைய, நாடளாவிய ரீதியில் 2200 பரீட்சை நிலையங்களும், 317 ஒருங்கிணைப்பு நிலையங்களும், 32 பிராந்திய சேவை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

கைதிகளுக்காக மெகசின் சிறைச்சாலையில் விசேட பரீட்சை நிலையமும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு மஹரகம வைத்தியசாலையில் விசேட பரீட்சை நிலையமும், விசேட தேவையுடைய மாணவர்களுக்காக ரத்மலானை, தங்காலை, கைதடி உள்ளிட்ட பிரதேசங்களில் விசேட பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

பரீட்சையின் போதான பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் ஒத்துழைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு வடக்கிலுள்ள தீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு கடல் மார்க்கமாகவும், ஆகாய மார்க்கமாகவும் வினாத்தாள்களை கொண்டு செல்வதற்கு கடற்படை மற்றும் விமானப்படையின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னாயத்தங்களுக்காக இவ்வாரம் முதல் நாளாந்தம் வளிமண்டலவியல் திணைக்களத்திடம் வானிலை அறிக்கை கோரப்பட்டுள்ளதோடு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடமிருந்தும் நிலைவர அறிக்கைககள் கோரப்பட்டுள்ளன.


பரீட்சார்த்திகளுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இலங்கை போக்குவரத்து சபை, தனியார் போக்குவரத்து சங்கங்கள் மற்றும் புகையிரத திணைக்களம் உள்ளிட்டவற்றுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பரீட்சை இடம்பெறவுள்ள 22 நாட்களும் மின்சாரத்தை துண்டிக்காமல் இருப்பதற்கு இலங்கை மின்சார சபையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது. எனவே, பரீட்சார்த்திகள் மின் துண்டிப்பு குறித்து கவலையடையத் தேவையில்லை.

இதுவரை அனுமதி அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் பரீட்சை திணைக்களத்தின்   www.onlineexams.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்துக்குள் பிரவேசித்து தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.


பரீட்சை மண்டபத்துக்கு தேசிய அடையாள அட்டையை கொண்டு செல்வது அத்தியாவசியமானதாகும். அடையாள அட்டைக்கு பதிலாக செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதி அட்டை என்பவற்றை கொண்டு செல்லவும் அனுமதியுண்டு. இவ்வாறு தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய எந்தவொரு அட்டையும் இல்லாதவர்கள் பரீட்சை திணைக்களத்துக்கு அது தொடர்பில் அறிவித்து, பரீட்சைக்கு தோற்ற முடியும்.

கையடக்க தொலைபேசி, நவீன கைக்கடிகாரம் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களை பரீட்சை மண்டபத்துக்குள் கொண்டு செல்வதும், தன்வசம் வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

பரீட்சை மண்டபத்தில் இவற்றை கொண்டு சென்றமை அல்லது தன்வசம் வைத்திருந்தமை அல்லது உபயோகித்தமை உறுதி செய்யப்பட்டால், குறித்த பரீட்சார்த்திக்கு 5 ஆண்டுகளுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கு தடை விதிக்கப்படும்.

விடையளிக்கும்போது கறுப்பு அல்லது நீல மை பேனையை மாத்திரமே உபயோகிக்க முடியும். அழி மை (டிபெக்ஸ்) உபயோகிக்கக்கூடாது. மேலும், கணக்கியல் (பாட இலக்கம் 33),  பொறியியல் தொழில்நுட்பவியல் பாடங்கள், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்களின்போது மாத்திரம் நிரல்படுத்தப்படாத (Non Programmable)   கணிப்பான்களை கொண்டு செல்ல முடியும்.

பாட மோதல்களை கொண்ட பரீட்சார்த்திகள் அதாவது ஒரே நாளில் இரு வேறு பரீட்சைகளுக்கு தோற்றவுள்ளவர்கள், அது குறித்து முன்னரே பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி அல்லது மேற்பார்வையாளருக்கு அறிவிக்க வேண்டும். இவர்கள் இரு பரீட்சைகளும் நிறைவடையும் வரை வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். உணவு இடைவேளைக்காக அரை மணித்தியாலம் வழங்கப்படும்.

பரீட்சை தொடர்பில் வேறு ஏதேனும் சிக்கல்கள் காணப்படின், 1911 என்ற அவசர இலக்கத்துக்கு அல்லது 011-2784208, 011-2784537, 011-2785211 மற்றும் 011-2786616 என்ற இலக்கங்களுக்கு அழைத்து தெளிவுபடுத்தல்களை பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாண்டுக்கான அனைத்து பரீட்சைகளையும் நடத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், உயர்தர பரீட்சையை நடத்துவதில் எவ்வித நிதி நெருக்கடியும் கிடையாது என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!