மாவட்ட அரசாங்க அதிபரால் நடத்தப்பட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண சுற்றுப் போட்டி
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண சுற்றுப் போட்டிகள் இன்று(24) காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில் :
நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டிகள் இடம்பெறவில்லை. இக்குறைபாட்டினை நீக்கும் முகமாக இம்முறை மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட விளையாட்டு பிரிவினரின் ஒத்துழைப்போடு இடம்பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும் இப் போட்டிகள் தினைக்களங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இடம்பெறுகிறது.
எனவே வெற்றி தோல்விக்கு அப்பால் நட்பு மற்றும் திறமைகளுடனான உயர்ந்த நற் பண்புகளை வளர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
குறித்த அரச அதிபர் வெற்றிக் கிண்ண தொடர் சதுரங்க விளையாட்டுடன் ஆரம்பமானது.
இவ் அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டியில் மாவட்ட செயலக அணி உட்பட நான்கு பிரதேச செயலகங்களின் அணிகள் பங்குபற்றுகின்றன.
குறித்த விளையாட்டுப் போட்டி ஊடாக உத்தியோகத்தர்களின் திறமைகளை இனங்காணல், உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தல் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களிடையே பரஸ்பர தொடர்புகளை உருவாக்குதல் போன்ற நோக்கங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச்செயலர், நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் விளையாட்டு பிரிவின் உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.